

அமெரிக்காவுக்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ள அதிராம்பட்டினம் பள்ளி மாணவர்கள் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள பிரிலியன்ட்(சிபிஎஸ்இ) மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர், பள்ளித் தாளாளர் வி.சுப்பிரமணியன் தலைமையில் 7 நாள் கல்விச் சுற்றுலாவாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு கடந்த நவ.14-ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு அங்குள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விண்வெளி வீரர்களின் சார்பில் பயண பயிற்சி மற்றும் ராக்கெட் ஏவுதல் (சிமிலேட்டர்) பயிற்சி வழங்கப்பட்டது. இதில், விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரராவதற்கு அளிக்கப்படும் பயிற்சி, ரோபோ தொழில்நுட்பம் ஆகியவை குறித்தும், செயற்கைக்கோளை கட்டுப்படுத்தி இயக்குவது எப்படி?, அது எப்படி இயக்கப்படுகிறது? என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
மேலும், ராக்கெட் மாதிரி செய்து பறக்கவிடும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மாணவர்களின் பயண முடிவில் மியாமி பல்கலைக்கழகத்துக்கு சென்று பார்வையிட்டனர்.