

பள்ளி வளாகத்தில் உள்ள புல்வெளியைச் செதுக்கி மாவட்ட வரைபடத்தையும், அதில் கோலமாவாவால் ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி படங்களையும் வரைந்துகீழகாவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் கீழகாவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகத்தில் புல்வெளியைச் செதுக்கி அரியலூர் மாவட்ட வரைபடத்தை மாணவ, மாணவிகள் வரைந்துள்ளனர். மேலும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழ புரத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் கடல்வாணிபம் மற்றும் கடல் வழித்தடம் அமைத்து ஆட்சிபுரிந்த மன்னன் ராஜேந்திர சோழனின் உருவப்படம், அவரது பாட்டி செம்பியன் மாதேவியின் உருவப்படம் ஆகியவற்றை கோலமாவைக் கொண்டு வரைந்து அசத்தினர்.
இதை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து 5 மணி நேரம் களப்பணியாற்றி செய்து முடித்துள்ளனர். இந்த ஓவியங்களை பொதுமக்கள் பார்வையிட்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம், ஓவிய ஆசிரியர் மாரியப்பன், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்குமார், உதவி தலைமை தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரேமா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.