

கோவை
பொதுத்தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை வகித்து பேசும் போது கூறியதாவது:
மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுகள் தரமாக வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் தினசரி படிக்கும் வகையில் அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். படிப்பு மட்டுமின்றி, மாணவர்களிடம் தனித்திறமைகளை வளர்க்கவும் ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும். பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, வளாகங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, 11-ம்வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.