Published : 25 Jan 2023 06:18 AM
Last Updated : 25 Jan 2023 06:18 AM

இந்தியா உருவாக்கிய 5 ஜி தொழில்நுட்பம்: இந்த ஆண்டு அறிமுகமாகும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு

காந்திநகர்: இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

உலகின் முக்கியப் பொருளாதார நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அந்த அமைப்பின் மிக முக்கியக் குழுக்களில் ஒன்றாக பி-20 உள்ளது. உலக அளவில் வணிக சமூகத்துடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஜி-20 அமைப்பின் அதிகார பூர்வ குழுவாக திகழும் பி-20-ல் நிறுவனங்கள், வணிக அமைப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்தக் குழுவின் கூட்டம் குஜராத் தலைநகர் காந்திநகரில் 3 நாள்கள் நடைபெறுகிறது. கூட்டத்தை தொடங்கிவைத்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

இந்தியாவில் 4ஜி, 5ஜி தொழில் நுட்பங்களை உருவாக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்பு வழியமைத்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 50,000 முதல் 70,000 கைப்பேசி கோபுரங்கள், இடங்கள் வாயிலாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு அந்தத் தொழில்நுட்பங்கள் உலக நாடுகளுக்கு வழங்கப்படும்.

கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்தது. பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. அதில் இருந்து வெளிவர பல நாடுகளில் அரசு செலவினம் அதிகரிப்பு, வரிக் குறைப்பு போன்ற பழைமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு மாறாக இந்தியாவில் நுகர்வு மீது கவனம் செலுத்தும் அணுகுமுறை கையாளப்பட்டது.

அணுகுமுறையை மாற்றியதால் மிதமான பணவீக்கத்துடன் வலு வான பொருளாதார வளர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின்தொலைநோக்கான அணுகுமுறைகளால் இந்தியப் பொருளாதாரம் பலமிக்கதாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x