Published : 20 Jan 2023 06:05 AM
Last Updated : 20 Jan 2023 06:05 AM

500 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

திருவாரூர்: தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 500 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

பசுமை பள்ளி திட்டம் என்பது பள்ளிகளில் மாணவர்கள் மூலமாக மழைநீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, காய்கறி தோட்டம் உருவாக்குவது, நீர் பயன்பாட்டை குறைப்பது, கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த திட்டம் ஆகும். நடப்பு நிதி ஆண்டில் 25 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய, மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பசுமை பள்ளி திட்டம்முதற்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளது. மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமின்றி நடுநிலைப் பள்ளிகளிலும் பசுமை பள்ளி திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதற்கிடையே, சென்னை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற நவீன கணித அறிவியல், தொழில்நுட்ப ஆய்வக திறப்புவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவாரூரில் இருந்தபடியே காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில்தான் ஸ்டெம் வகை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நமக்குஇளம் விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். இத்தகைய முன்னெடுப்புகள் அதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளிகளில் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுவதின் மூலமே இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொழில்நுட்ப ஆய்வகம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக செய்முறை பயிற்சிகள் உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அமெரிக்க-இந்திய அறக்கட்டளையின் உதவியுடன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் வகையிலான நவீன கணித, அறிவியல், தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவரும், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

அவர் பேசும்போது, "உலகத்தில் அதிக மக்கள் தொகை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நம்மிடம் உள்ள இளைஞர்கள் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை பள்ளிகளிலேயே தொடங்க வேண்டும். ஆனால், விளையாட்டுக்கு கொடுக்கும் அளவுக்கு கூட அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்க நமக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை.

இந்நிலை மாற வேண்டும். அதற்கு வானவில் மன்றம் திட்டம் உதவிகரமாக இருக்கும். நானும் அரசு பள்ளியில் படித்தவன்தான். நாம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி கொண்டால் சாதனை புரியலாம்" என்றார்.

அமெரிக்க- இந்திய அறக்கட்டளை மூலம் சென்னையில் உள்ள 12 அரசு பள்ளிகளில் பயிலும்200 மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் குறித்த செய்முறை பயிற்சி தரப்பட்டது. அதன் வாயிலாக மாணவர்களே வடிவமைத்த ராக்கெட் மாதிரிகள், சிறியரக ட்ரோன்கள் விழாவின்போது வானில் பறக்கவிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x