Published : 19 Jan 2023 06:15 AM
Last Updated : 19 Jan 2023 06:15 AM

பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம்

கோவை: பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, பிளஸ் 1, பிளஸ் 2 என மூன்று பிரிவுகளில் 207 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட அளவில் நடைபெற்றபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் பள்ளிஅளவில் நடைபெற்ற போட்டிகளில் 1.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளிலும், வட்டார அளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற 12,364 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டனர். கோவை மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 438 மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 197 பேர் வெற்றிபெற்றனர். இதையடுத்து அதிக வெற்றிகள் பெற்று, கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.

சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்பை பரிசளித்தார். சேலம் இரண்டாம் இடமும், புதுக்கோட்டை மூன்றாம் இடமும் பிடித்தன. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரின் ஊக்குவிப்பு ஆகியவை மாணவர்கள் அதிக வெற்றிகளை பெற ஊக்கமளிப்பதாக இருந்தது. இவ்வாறு பூபதி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x