Published : 12 Jan 2023 06:14 AM
Last Updated : 12 Jan 2023 06:14 AM
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த மாத இறுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கடந்த டிசம்பர் 30-ம் தேதி
டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இதனால் அவர் இலங்கைக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடரில்விளையாட முடியாமல் போனது. இதனிடையே அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா அல்லது மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.
இதனிடையே, அவர் உடல்நலம் தேறி வருவதற்கு 6 மாத காலம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குநராக இணையவுள்ள சவுரவ் கங்குலி நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார். அவர் இல்லாதது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரிய இழப்புதான். அதனால் அந்த அணிக்கு பாதிப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 20-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி நிறைவடையவுள்ளன. 74 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT