Published : 09 Jan 2023 06:07 AM
Last Updated : 09 Jan 2023 06:07 AM
மும்பை: இந்தியாவில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் தந்தையாக போற்றப்படும் டாக்டர் டெஹம்டன் இ உத்வாடியா நேற்றுகாலமானார். அவருக்கு வயது 88.
மனிதர்களின் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் போது, உடலை அறுக்காமல் சிறுதுளையிட்டு கணினி மூலம் திரையில்பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதை லேப்ராஸ்கோபிக் (Laparoscopic) அல்லது சாவி துளை அறுவை சிகிச்சை (keyhole surgery) என்கின்றனர். இதன் மூலம் ரத்தபோக்கு கணிசமாக குறைகிறது. நோயாளிக்கு வலி குறைவாக இருக்கும். குணமாகும் காலமும் குறைகிறது. மருத்துவமனையில் தங்கும் காலம், செலவு போன்ற பல விஷயங்கள் கணிசமாக குறையும்.
இவ்வளவு சிறப்பான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் தந்தை என்று இந்தியாவில் டாக்டர் டெஹம்டன் இ உத்வாடியா போற்றப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் டெஹம்டன் நேற்று காலை 11.15 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 88. டெஹம்டன் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்கூறியிருப்பதாவது: மருத்துவத் துறையில்அழிக்க முடியாத தடயத்தை டாக்டர்டெஹம்டன் பதிவு செய்து சென்றிருக்கிறார். சிகிச்சை அளிக்கும் முறையில் அவரது புதுமை மற்றும் விருப்பத்தின் காரணமாக பரவலாக அறியப்பட்டுள்ளார். அவரது மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள்,மருத்துவ துறையினருக்கு எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பைகுலாவில் உள்ள ஜேஜே அரசு மருத்துவமனையில் டாக்டர் டெஹம்டன் பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அத்துடன் சில மாதங்களுக்கு முன்பு வரை பிரீச் கேண்டி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் பணியாற்றி வந்தார். மறைந்த டாக்டர் டெஹம்டனின் சிறந்த மருத்துவ சேவைக்காக மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டுபத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.
டாக்டர் டெஹம்டனின் முன்னாள் மாணவரும் ஜேஜே அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவருமான டாக்டர் தீப்ராஜ் பண்டார்கர் கூறும்போது, ‘‘இந்தியாவிலேயே முதல் முறையாக ஜேஜே மருத்துவமனையில் கடந்த 1990-ம் ஆண்டு மே 31-ம்தேதி லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையை டாக்டர் டெஹம்டன் மேற்கொண்டார். அதுதான் ஆசியாவிலேயே முதல் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை’’ என்றார்.
எனினும், டாக்டர் டெஹம்டனின் புதிய முயற்சியை ‘‘இந்தியா போன்ற நாடுகளில் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் அவசரப்பட கூடாது’’ என்று விமர்சித்தனர். அதற்கு, ‘‘எல்லா பிரச்சினைகளும் தீரும் வரை காத்திருந்தால், வளர்ச்சி என்பதே இருக்காது’’ என்று டாக்டர் டெஹம்டன் உறுதியாக தெரிவித்தார். முதல் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நாடு முழுவதும் அவர் பயணம் செய்தார். மருத்துவத் துறையினரை சந்தித்து லேப்ராஸ்கோபிக் சிகிச்சை முறையை பிரபலப்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT