Published : 09 Jan 2023 06:04 AM
Last Updated : 09 Jan 2023 06:04 AM

கலைத் திருவிழா | வென்றவர்களுக்கு 12-ல் பரிசளிப்பு: சென்னை வந்த மாணவர்களை அமைச்சர், மேயர் வரவேற்றனர்

சென்னை: அரசு பள்ளிகளுக்கான கலைத்திருவிழாவின் மாநில போட்டிகளில் வென்றவர்கள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரத் தொடங்கியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான கலைத் திருவிழா அண்மையில் நடைபெற்று முடிந்தது. மாநில அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சென்னையில் வரும் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கவுள்ளார். இதற்காக முதல்கட்டமாக நேற்று சென்னை வந்த மாணவர்களை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

அரசு பள்ளிகளில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் 200-க்குமேற்பட்ட பிரிவுகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இத்திருவிழா பள்ளி, வட்டார, வருவாய் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கோயம்புத்தூர், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் மொத்தம் 17,569மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கலை பிரிவிலும் முதல்மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 2023 ஜனவரி 12-ல் நினைவு பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

விழாவில் கலந்து கொள்ள 38 மாவட்டங்களில் இருந்து வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று 222 மாணவர்கள் வந்தனர்.

இவர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x