Published : 05 Dec 2022 06:15 AM
Last Updated : 05 Dec 2022 06:15 AM
புதுடெல்லி: இந்தியப் பெருங்கடலில் சீன கப்பல்களை கண்காணித்து வருகிறோம் என்று இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை தளபதி ஹரி குமார் கூறியதாவது: இந்தியப் பெருங்கடலில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்தியப் பெருங்கடலில் ஏராளமான சீன கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 4 முதல் 6 வரை சீன போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஆராய்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய பெருங்கடலில் ஏராளமான மீன்பிடிகப்பல்களும் இயக்கப்பட்டு வருகின்றன.அங்கு நிகழும் அனைத்து நடவடிக்கை களையும் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
வழக்கத்திற்கு மாறாக வேறு சில நாடுகளின் செயல்பாடுகளும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல், மிகப் பெரிய வர்த்தக பகுதி என்பதையும், வர்த்தகப் பரிமாற்றங்கள் நிகழும் பகுதி என்பதையும் நாங்கள் அறிவோம். அதேநேரத்தில் இந்திய கடல் எல்லையை இந்திய நலன்களுக்காக பாதுகாக்க வேண்டியது எங்கள் பணி. நாங்கள் அதை மேற்கொண்டு வருகிறோம். நமதுகடல் எல்லையைக் காக்க விழிப்புடன் இருக்கிறோம். இதற்காக, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக இருக்கிறது. இந்திய கடற்படையின் தயார் நிலை என்பது நம்பகத்தன்மை மிக்கது. எந்த சூழ்நிலையிலும் சாதிக்கவல்லது.
தற்சார்பு இந்தியா எனும் கொள்கையின் அடிப்படையில் இந்திய கடற்படைக்குத் தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் நமது பாதுகாப்புக்கு பிற நாடுகளை சார்ந்திருக்கக் கூடாது என அரசு கூறி இருக்கிறது. அரசின் தெளிவான வழிகாட்டலின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படை 100 சதவீதம் தற்சார்பு கடற்படையாக மாறிவிடும்.
கடந்த ஓராண்டில் இந்திய கடற்படை மிக உயா்ந்த செயல்பாட்டு வேகத்தை எட்டியுள்ளது. அக்னிப் பாதை திட்டத் தின் கீழ், கடற்படையில் சுமாா் 3,000 வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களில் 341 போ் பெண்கள். முதல்முறையாகக் கடற்படையில் பெண் மாலுமிகள் சோ்க்கப்பட உள்ளனா். இவ்வாறு கடற்படை தளபதி ஹரி குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT