Published : 01 Nov 2022 06:16 AM
Last Updated : 01 Nov 2022 06:16 AM

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கு: அனைத்து தரப்பினரும் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான மனுக்கள் மீது அனைத்து தரப்பினரும் 3 வாரங்களில் தங்கள் வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று 2019-இல் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 232 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டம் சமத்துவ உரிமையை மீறுவதாகவும், மதத்தின் அடிப்படையில் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமையை வழங்க முயற்சிப்பதாகவும் கூறி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானபொதுநல மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x