Published : 28 Oct 2022 06:13 AM
Last Updated : 28 Oct 2022 06:13 AM

50 - வது நாளை எட்டியது ராகுலின் பாத யாத்திரை

ஹைதராபாத்: காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொள்ளும் யாத்திரை 50வது நாளை எட்டியுள்ளது. 3 நாள் இடைவெளிக்குப் பின்னர் தெலங்கானா வில் நேற்று பாத யாத்திரையை ராகுல் தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., தூரம், 'ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரிலான நடை பயணத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கடந்த மாதம் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவை கடந்து தற்போது தெலுங்கானாவில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுலுடன் ஏராளமான தொண்டர் கள் நடை பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23-ம் தேதி தெலங்கானாவின் மஹபூப் நகரை ராகுல் அடைந்தார். தீபாவளி பண்டிகை, காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு ஆகியவற்றால் 3 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு, மீண்டும் மஹபூப் நகரில் இருந்து தனது பயணத்தை ராகுல் துவங்கினார். நேற்று சுமார் 27 கி.மீதூரத்தை கடந்து மக்தல் என்றஇடத்தில் முடித்தார்.

நேற்றைய பாத யாத்திரையின் போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி மத்தளம் வாசித்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். நவம்பர் 1-ஆம் தேதி ஐதராபாத் சென்றடையும் ராகுல், அங்கு சார்மினாரில் தேசியக் கொடி ஏற்றி பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். 50-வது நாளில் இதுவரை தமிழகம், கேரளா,கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் 18 மாவட்டங்களில்1,230 கி.மீ நடை பயணம் மேற்கொண்டுள்ளார். தெலங்கானாவில் யாத்திரையை நிறைவு செய்தபின் நவம்பர் 7-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாத யாத்திரை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x