Published : 28 Oct 2022 06:04 AM
Last Updated : 28 Oct 2022 06:04 AM

இதுவரை மேற்படிப்பில் சேராத பிளஸ் 2 மாணவர்களுக்காக அரசு பள்ளிகளில் இன்று உயர்கல்வி சிறப்பு முகாம்

சென்னை: இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து இதுவரை மேற்படிப்பில் சேராத பிளஸ் 2 மாணவர்களுக்காக அரசுமேல்நிலைப் பள்ளிகளில் இன்று உயர்கல்வி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும்வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டு ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியே கலைத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், முன்னாள் மாணவர்களைக் கொண்டும் அரசு தொடர் நெறிப்படுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த கல்வி ஆண்டில் (2021-2022) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில்கின்றனரா என்பதை அறியும் வகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முகாம்கள் அரசுமேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமின்போது தங்கள் பள்ளியில் பிளஸ் 2 முடித்து இதுவரை மேற்படிப்பில் சேராத மாணவ, மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் அடையாளம் கண்டு அவர்களை பள்ளிக்கு வரவழைக்கின்றனர். அவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டு கையேடு அளிப்பதுடன் அவர்கள் எந்தெந்த கல்லூரியில் என்னென்ன படிப்பில் சேரலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்குகிறார்கள். மாணவர்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேரவும் தேவையான உதவிகளை செய்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இதுவரை 2 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமான மாணவ, மாணவிகள் மேற்படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் மேற்படிப்பில் சேராத மாணவர்களுக்காக அவர்கள் படித்த பள்ளிகளில் 3-வதுகட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-2022 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் உயர்கல்விக்குச் சென்றுவிட்டனர். எனினும் சூழ்நிலை காரணமாக சில மாணவர்கள் இன்னமும் கல்லூரிகளுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்காக உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக அக்டோபர் 28-ம் தேதி (இன்று) காலை 10 மணி தொடங்கி முகாம்கள் நடைபெறுகின்றன.

இம்முகாம்களில் கல்லூரிச் சேர்க்கைக்கான முறையாக வழிகாட்டுதலோடு ஆலோசனைகள் வழங்கப்படும். இம்முகாமில் பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன் உயர்கல்வியின் அவசியமும் எடுத்துரைக்கப்படும். இதுவரை கல்லூரியில் சேராத தங்கள் வகுப்பு நண்பர்களை அழைத்துக் கொண்டு வரும்படியும், அப்படி முடியாதபட்சத்தில் அவர்கள்குறித்த தகவல்களை பள்ளி தலைமையாசிரியருக்கு அளிக்கும்படியும் தமிழக அரசு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வழிகாட்டுதல் வேண்டி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அவரவர் படித்த பள்ளிகளில் ஆலோசனைகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று எஸ்எம்சி கூட்டம்:

இதற்கிடையே, அனைத்து அரசுபள்ளிகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "அனைத்து அரசு பள்ளிகளிலும், அக்டோபர் 28-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், பள்ளி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, கற்றல், கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத் திட்டங்களின் செயல்பாடு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், நவம்பர் 1-ம் தேதி அன்று உள்ளாட்சிகளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில், பள்ளியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்த கூட்டத்தில், மேலாண்மை குழுவில் உள்ள ஆசிரியர், சமூக ஆர்வலர், கவுன்சிலர் உள்ளிட்டவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x