Published : 18 Oct 2022 06:06 AM
Last Updated : 18 Oct 2022 06:06 AM

சுவாச கோளாறால் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள்: ஓசூர் மேயர் சத்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுவாச கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 7 மாணவர்களை ஓசூர் மேயர் சத்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த 14-ம் தேதியன்று சுவாச கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்த 67 மாணவர்களும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில் ஒரு மாணவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஓசூரில் சிகிச்சை பெற்று வந்த 66 மாணவர்களில் 59 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் 5 மாணவர்களும், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 மாணவர்களும் என மொத்தம் 7 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்த 7 மாணவர்களையும் ஓசூர் மேயர் சத்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மாணவர்களுக்கு உரியசிகிச்சை வழங்கிடவும், மாணவர்களுக்கு ஏற்பட்ட மயக்கத்துக்கான காரணத்தை விரைவில் கண்டறியவும் மாநகராட்சி குழுவுக்கு உத்தரவிட்டார்.

அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஓசூர் அரசுமருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x