

கிருஷ்ணகிரி: மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கிருஷ்ணகிரி மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 237 மனுக்களை வழங்கினர்.
இம்மனுக்களை பெற்ற ஆட்சியர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார். இதனிடையே, திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற 28 மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் ஐயப்பன், ஜூடோ பயிற்சியாளர்கள் முருகன், வினோத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.