Published : 11 Oct 2022 06:06 AM
Last Updated : 11 Oct 2022 06:06 AM

அரசு பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு விசாரணை

புதுடெல்லி: அரசு பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் தேசிய குழந்தைகள் நல ஆணையத்திடம் முறையிடும்படி மனுதாரருக்கு வழிகாட்டி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பள்ளிகள் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

இந்திய பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை இருந்தாலும் கூட போதிய பாதுகாப்பின்மை நிலவுகிறது. இதனால் அந்நியர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து மாணவ, மாணவியருக்கு தொந்தரவு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அரசு பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

முறையிட அறிவுறுத்தல்: இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் கோரிக்கைகள் ஏற்கக்கூடியதுதான். ஆனால், இம்மனுவின் சாராம்சம் தொடர்பான கோரிக்கைகளை தேசிய குழந்தைகள் நல ஆணையத்திடம் முறையிடும்படி வலியுறுத்தியது. ஆணையம் அளிக்கும் பதிலின்படி உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மனுதாரருக்கு அதில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் அப்போது அவர் நீதிமன்றத்தை நாடலாம் என்று அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக, தமிழகத்தின் பலபள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்கிற மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை, 21 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லை, 290 பள்ளிகளில் கழிவறையில் குப்பைத்தொட்டி இல்லை என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x