Published : 10 Oct 2022 06:18 AM
Last Updated : 10 Oct 2022 06:18 AM
பெங்களூரு: புதிய கல்விக் கொள்கை நமது வரலாற்றை சிதைப்பதால்தான் அதை காங்கிரஸ் எதிர்க்கிறது என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கினார். தற்போது கர்நாடகாவில் ராகுல் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தும்கூருவில் செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை நமது நாட்டின் அடிப்படை பண்புகளை பாதிக்கிறது. புதிய கல்வி கொள்கை யானது இந்திய வரலாற்றை திரிக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் சுதந்தித்திற்காக போராடினார். ஆனால், புதிய கல்விக் கொள்கை மூலம் நமது வரலாற்றை சிதைக்க முயற்சிக்கின்றனர். அதனால்தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி முறைதான் நமக்கு தேவை.
நாட்டில் பிராந்திய மொழிகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஒவ்வொரு தாய்மொழியும் நமக்கு முக்கியம். எல்லா மொழிகளையும் சமமாகவே மதிக்கிறோம். அரசமைப்பு சட்டத்தில் எல்லாருக்கும் சமமான உரிமைகள் உண்டு. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தி மொழியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் இல்லை.
எல்லா மொழிகளையும் எல்லாமாநிலங்களையும் சமமாக மதிப்பதுதான் கூட்டாட்சித் தத்துவம். இதில் காங்கிரஸ் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. வேற்று மையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம். சமூகத்தில் எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT