Published : 22 Aug 2022 07:20 AM
Last Updated : 22 Aug 2022 07:20 AM
புதுடெல்லி: இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வலுப்படுத்தவும், கல்வி மற்றும் திறன்மேம்பாட்டில் உள்ள இணைப்பு, ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 4 நாள்பயணமாக ஆஸ்திரேலியா சென்றார்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுகின்றன. இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேலும் மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நான்கு நாள் பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஆஸ்திரேலியா பயணத்துக்கு முன்பாகஅமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியாவின் கல்வித் துறையில் சீர்திருத்தங்கள், இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உறவுகளின் மேம்பாடு ஆகியவை நமது ஒத்துழைப்பின் முக்கிய தூணாக அறிவுப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இருதரப்புக்கும் ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
எனது இந்த சுற்றுப்பயணம் நமது நோக்கத்தின் ஒற்றுமைக்கும் மேம்பாட்டுக்கும் கூடுதல் வேகமும் வலிமையும் சேர்க்கும். இரு நாடுகளின் மாணவர்களின் ஆராய்ச்சித் திறனும் விரிவாகவும் மேம்படுத்தப்பட்ட வகையிலும் அமைய இந்தப் பயணம் உதவும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நியூ செளத்வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு இன்று செல்கிறார்.
மேலும் நாளை மெல்போர்னில் உள்ள கங்கன் இன்ஸ்டிடியூட் மற்றும் டீக்கின் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் தர்மேந்திர பிரதான், கல்வியாளர்களையும் ஆஸ்திரேலிய கல்வி மற்றும்திறன் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்கள் மற்றும் மெல்போர்னில் வசிக்கும்இந்திய புலம்பெயர்ந்தோர், தொழில்முனைவோரை சந்தித்துப் பேசுகிறார்.
ஆஸ்திரேலியா-இந்தியா ஆராய்ச்சி ஒத்துழைப்பை வெற்றிகரமாக உருவாக்கு வது குறித்து ‘குரூப் 8’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் முக்கிய எட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் பிரதான் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆஸ்திரேலியா இந்திய வர்த்தக சபை மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யவுள்ள நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT