Published : 26 Jul 2022 06:40 AM
Last Updated : 26 Jul 2022 06:40 AM
யூஜின்: உலக தடகளப் போட்டியின் போல் வால்ட் விளையாட்டில் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) ஸ்வீடன் வீரர் அர்மன்ட் டுப்லான்டிஸ் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
8-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் போல் வால்ட் போட்டியில் ஸ்வீடன் வீரர் அர்மன்ட் டுப்லான்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.
அவர் 6.21 மீட்டர் உயரம் தாண்டி இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் சாம்பியனான அர்மண்ட் இதற்கு முன்பு 6.20 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. தற்போது தனது சாதனையை முறியடித்து அவர் புதிய உலக சாதனையைச் செய்துள்ளார்.
அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் நீல்சன் 5.94 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிலிப்பைன்ஸ் வீரர் எர்ஸைட் 5.94 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் கைப்பற்றினர்.
மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. ஜமைக்கா, ஜெர்மனி நாடுகள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றன.
இந்தப் போட்டியில் அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றியது.
பட்டியலில் நீரஜ் சோப்ரா வென்ற ஒரே ஒரு வெள்ளியுடன் இந்தியா, 33-வது இடத்தைப் பிடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT