Published : 22 Jul 2022 06:38 AM
Last Updated : 22 Jul 2022 06:38 AM

உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதி சுற்றில் அன்னு ராணி

யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அன்னு ராணி 59.60 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அன்னு ராணி இறுதி சுற்றுக்கு 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளார். கடந்த 2019-ல் தோஹாவில் நடைபெற்ற போட்டியிலும் அன்னு ராணி இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த அன்னு ராணி 5-வது இடம் பிடித்தார். எனினும் அவர், 60 மீட்டர் தூரத்தை எட்டாதது ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தேசிய சாதனையாளரான 29 வயதான அன்னு ராணி, இந்த சீசனில் அதிகபட்சமாக 63.82 மீட்டர் தூரம் எறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி சுற்றில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் கூட்டாக 16 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 12 பேர் 62.50 மீட்டர் தூரத்தை எட்டியிருந்தனர். இதனால் இறுதி சுற்றில் அன்னு ராணி கடும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இறுதி சுற்று இந்திய நேரப்படி நாளை காலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது. ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ‘ஏ’ பிரிவில் தகுதி சுற்று இன்று காலை நடைபெறுகிறது. இந்த பிரிவில்தான் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இடம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x