Published : 18 Jul 2022 06:20 AM
Last Updated : 18 Jul 2022 06:20 AM

இலவச மடிக்கணினி திட்டம் ரத்து இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட வில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்விவளர்ச்சி தின விழா நடைபெற்றது.

இவ்விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, ‘‘குலக்கல்வியை கடுமையாக எதிர்த்ததால்தான் காமராஜர் முதல்வரா னார். பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, கல்வியில் தனிக்கவனம் செலுத்தினார்.

மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை நமக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, தான் தமிழகத்துகென தனியாக மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறோம். நமக்கான கல்வியை நாமே உருவாக்கிக் கொள்வோம்” என்றார். தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. கரோனா பரவல் உட்பட சில இடையூறுகளால் கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.

இதனால் தற்போது 11 லட்சம் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், துறை அதிகாரிகளுடன் விவாதித்தபோது மடிக்கணினிதான் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மடிக்கணினியே தொடர்ந்து வழங்கப்படும். மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர கூடுதலாக ஒரு போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x