Published : 15 Jul 2022 06:43 AM
Last Updated : 15 Jul 2022 06:43 AM
புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது
பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னர் ஆட்சியை கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி, பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை அந்நாட்டு மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து,மக்களாட்சியை நிறுவினர்.
இந்த நாள், பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது. மேலும், அந்தக்காலத்தில் மின்சாரம் இல்லாததால், மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென் றனர்.
இந்த தினத்தை நினைவு கூரும் வகையில், பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் முதல் நாளான ஜூலை 13-ம் தேதி இரவு பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். இந்த வகையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற மின் விளக்கு ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு தேசிய தினத்தை ஒட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், பிரெஞ்ச் துணை தூதர் லிசே டல்போட் பரே, மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT