Published : 04 Jul 2022 06:18 AM
Last Updated : 04 Jul 2022 06:18 AM

சென்னை | 12 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்காக சைக்கிள் உதிரிபாகங்களைப் பொருத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்று ஏழை பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மேல்நிலைக் கல்வியில் குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 2001-2002-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாணவிகளுக்கு இலவசசைக்கிள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் 2005-2006-ம் ஆண்டில் அரசுமற்றும் அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது சைக்கிள்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, அதன் உதிரி பாகங்களைப் பொருத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் இலவச சைக்கிள் வழங்கப்படாததால், இந்தாண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

இதனால் சுமார் 12 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x