Last Updated : 02 Nov, 2021 06:37 PM

 

Published : 02 Nov 2021 06:37 PM
Last Updated : 02 Nov 2021 06:37 PM

பள்ளிகள் திறப்பு: 'அறிவியல் அறிவோம்' நிகழ்ச்சி மூலம் உற்சாகமூட்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் செய்முறை குறித்து விளக்கினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சதாசிவம்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை அறிவியல் அறிவோம் எனும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் பல மாதங்களாகப் பள்ளி செல்லாமல் வீடுகளில் முடங்கியிருந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நேற்றில் இருந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், பள்ளி செல்லாமல் வீடுகளில் இருந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாட்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியலை அறிவது குறித்த ’மந்திரமா, தந்திரமா? எனும் நிகழ்ச்சி இன்று (நவ.2) நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சதாசிவம், பல்வேறு அறிவியல் செய்முறைகளைச் செய்து காட்டினார். அதன் மூலம் அறிவியல் கூறும் கருத்து குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

அப்போது சதாசிவம் கூறும்போது, "கரோனா ஊரடங்கினால் இறுக்கமான மனதோடு காணப்படும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பள்ளிகளுக்கே சென்று இலவசமாக நடத்தி வருகிறோம். பாடங்களைக் கற்பிக்கும் முன்பாக, தொடர்ந்து 2 வாரங்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளையே நடத்தி, மாணவர்களைத் தயார்படுத்துமாறு தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது. தேவைப்படுவோர் அறிவியல் இயக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளை அறிவொளி கருப்பையா ஒருங்கிணைத்தார். பெற்றோர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாகப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். உதவி ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x