Published : 28 Sep 2021 06:19 PM
Last Updated : 28 Sep 2021 06:19 PM

அக்.2; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னை

காந்தி பிறந்த நாள் அன்று சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் நாளில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. போட்டித் தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்பெறும். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை அந்தந்தக் கல்லூரி முதல்வரே தெரிவுசெய்து போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். அதேபோன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களே தெரிவு செய்து போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும்

1. முதல் பரிசு ரூ.5000/-

2. இரண்டாம் பரிசு ரூ.3000/-

3. மூன்றாம் பரிசு ரூ. 2000/- என்ற வகையில் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் இருவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000/- வீதம் தனியே வழங்கப்பெறும்.

போட்டி நாள் : 02.10.2021, 10.00 மணி

பள்ளிப் போட்டி நடைபெறும் இடம்:

வட சென்னை:

தருமமூர்த்தி ராவ்பகதூர் காலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளி
பெரம்பூர், சென்னை.

தென் சென்னை:

ராமகிருஷ்ண மடம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகராய நகர், சென்னை

மத்திய சென்னை:

குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்.

கல்லூரிப் போட்டி நடைபெறும் நேரம்: 02.10.2021, பிற்பகல் 2 மணி

வட சென்னை:

அம்பேத்கர் கலைக் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை

தென் சென்னை

சென்னை மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை

மத்திய சென்னை

பாரதி மகளிர் கலைக் கல்லூரி, பிராட்வே, சென்னை

அரசு அறிவித்துள்ள கரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்பெறும்''.

இவ்வாறு தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x