Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

தமிழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் 8 கல்வி நிறுவனங்களில் 29 புதிய படிப்புகளுக்கு அனுமதி

சென்னை

தமிழகத்தில் உள்ள 2 அரசுபல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட8 பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வி முறையில் 29 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்துவகையான பல்கலைக்கழகங்களும் தங்கள் நிறுவனத்தில் புதிய பட்டப்படிப்புகளைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) முறையான அனுமதி பெறவேண்டும். அதன்படி, தொலைதூரக் கல்வி முறையில் புதிய பட்டப் படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் தொடங்க அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் யுஜிசி-யிடம் அனுமதி கோரியிருந்தன.

இந்நிலையில், தொலைதூரப் படிப்புகளைத் தொடங்க பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு முதல்கட்டமாக கடந்த மார்ச் மாதமும், 2-ம் கட்டமாக செப்டம்பர் முதல் வாரத்திலும் யுஜிசி அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், 3-ம் கட்டமாக நாடு முழுவதும் தொலைதூரக் கல்வி முறைக்கு 17 பல்கலைக்கழகங்களில் கூடுதலாக 59 படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

10 படிப்புகள்

அதன்படி, தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு முதுநிலை படிப்புக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் 3 இளநிலை மற்றும் 6 முதுநிலை என மொத்தம் 10 படிப்புகளுக்கும் யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.

இதுதவிர, பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 4 படிப்புகள், எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 5 படிப்புகள், வேலூர் விஐடியில் 5 படிப்புகள் உட்பட 6 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 19 படிப்புகள் என, தமிழக கல்வி நிறுவனங்களுக்கு மொத்தம் 29 படிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.ugc.ac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x