Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

கரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு: மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருகை

சென்னை

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை பரவலால், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்டன. இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் செப்.1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும், கல்லூரிகளில் மாணவர்கள் சுழற்சி முறையிலும் வரவழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளிகள் மற்றும்கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.

நீண்ட இடைவெளிக்குபின் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள்ஆர்வத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகை புரிந்தனர். அதேநேரம் கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகபின்பற்றப்பட்டன. உடல்வெப்ப நிலை சோதனைக்குப் பிறகே மாணவர்களும், ஆசிரியர்களும் உள்ளேஅனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் முறையாக பின்பற்றப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளிகள் திறப்பு மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு தினமும் கண்காணிப்படும். மாணவர்களை மனரீதியாக தயார்படுத்தும் வகையில் 45 தினங்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் மட்டுமே நடத்தப்படும். நடப்பாண்டு பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இருக்காது. தற்போதைய நடைமுறையே தொடரும்” என்றார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகம், தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் வகுப்பறைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசின் நிலையானவழிகாட்டுதல்களை பின்பற்றி கல்லூரிகள் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம். வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுகின்றனர். கல்லூரிகளுக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்துவதற்காக கல்லூரி வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

இந்த சந்திப்பின்போது அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x