எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். மாணவர் சேர்க்கை- ‘கேட்’ நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். மாணவர் சேர்க்கை- ‘கேட்’ நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், உதவித்தொகையுடன் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கு `கேட்' நுழைவுத்தேர்வு (Graduate Aptitude Test in Engineering) நடத்தப்படுகிறது.

சில தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன. ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு ஐஐடி கேட் நுழைவுத்தேர்வை நடத்தும். அந்த வகையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2022-2023) கேட் நுழைவுத்தேர்வை கரக்பூர் ஐஐடி நடத்த உள்ளது. 2022 பிப்ரவரி 5, 6 மற்றும் 12 13-ம் தேதிகளில் பல்வேறு கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படும்.

சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 20 பாடப் பிரிவுகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கேட் நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. https://gate.iitkgp.ac.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி செப்டம்பர் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான அனுமதிச்சீட்டு ஜனவரி 3-ம் தேதி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். நுழைவுத்தேர்வு முடிவு மார்ச் 17-ல் வெளியாகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in