Published : 09 Aug 2021 05:53 PM
Last Updated : 09 Aug 2021 05:53 PM

ஆன்லைன் மூலம் இன்டர்ன்ஷிப் பயிற்சி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

கரோனா பாதிப்பு காரணமாக இன்டர்ன்ஷிப் எனப்படும் நேரடிக் களப் பயிற்சிக்கு வாய்ப்பு இல்லாததால், இணையவழியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் படிப்புகளுக்கு ஏற்ற வகையிலான தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்களில் செயல் முறையில் சில மாதங்களுக்கு அனுபவப் பாடம் பயில வேண்டும். அதன்படி, இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள் கட்டாயம் நேரடிக் களப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இத்தகைய மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வில் உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக இறுதியாண்டு மாணவர்கள் களப் பயிற்சிக்காகத் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. இதனால் தொழில் நிறுவனங்களுடன் இணையவழியில் களப் பயிற்சியை மாணவர்கள் மேற்கொண்டு வந்தனர். எனினும் எல்லா நிறுவனங்களிலும் ஆன்லைன் பயிற்சி சாத்தியப்படாததால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், மாணவர்கள் தங்களின் களப் பயிற்சியை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கான தொழில் நிறுவனப் பயிற்சியை ஸ்வயம் (SWAYAM) அல்லது திறந்தநிலை இணையவழித் திட்டம் (MOOC) மூலமாக மேற்கொள்ளலாம். அதன்படி, பயிற்சியை முடித்த பின்னர் பெறப்பட்ட சான்றிதழ்கள் அல்லது மதிப்பெண் பட்டியலைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இதன் மூலம் களப் பயிற்சிக்கான மதிப்பெண்கள் பல்கலைக்கழகச் சான்றிதழில் சேர்க்கப்படும். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஓராண்டுக்கு மட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x