Published : 19 Jul 2021 02:42 PM
Last Updated : 19 Jul 2021 02:42 PM

ஜூலை 26 முதல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை

மாணவர்கள் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை இன்று வெளியிட்டுள்ளார். இதை மாணவர்கள் இன்றே காண முடியும் என்றாலும் ஜூலை 22-ஆம் தேதி முதல் அவர்கள் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்கள் கிடைத்தவுடன் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும். மாணவர்கள் ஜூலை 26-ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப அந்தந்த கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த அமைச்சர் பொன்முடி, ''அதுகுறித்து பிறகு அறிவிக்கப்படும். நிதிநிலை அறிக்கையில் சில அறிவிப்புகள் வெளியாகும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x