Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM
ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேற்றுநேரில் சந்தித்து ஆசிரியர் கலந்தாய்வு காலிப் பணியிடங்களை நிரப்புதல், அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளது. காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். பின் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களில் சிலர், கடந்த ஆட்சியில் அங்கன்வாடி மையத்துக்கு பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கும்போது அங்கன்வாடி மையத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆணை வெளியிட வேண்டும்.
கரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
கடந்த 2017-ல் ஆசிரியர்களின் உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஆசிரியர்களிடம் விளக்கக் கடிதம் பெறப்பட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
தாங்கள் இதுகுறித்து கல்வித் துறை இயக்குநரிடம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT