Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தீவிரம்: மாநகராட்சி பள்ளிகளில் சேர தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம்

கோவை

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் 16 மேல்நிலைப் பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள், 15 நடுநிலைப் பள்ளிகள், 40 தொடக்கப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி என மொத்தம் 82 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுக்கு பிறகு, கடந்த 28-ம் தேதி முதல் மாநகராட்சி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் கரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, அரசு பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் விலையில்லா உபகரணங்கள் வழங்கல் உள்ளிட்ட காரணங்களால் தனியார் பள்ளிகளில் இருந்து மாநகராட்சி பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கின்றனர் மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள்.

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டபோது, “எங்களது பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சேர அதிகளவில் மாணவர்கள் வருகின்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் சேரவும் பிற தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வருகின்றனர். கடந்த ஆண்டை விட இம்முறை அந்த எண்ணிக்கை தொடக்க தினங்களிலேயே அதிகமாக உள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கிவிட்டால் இன்னும் அதிக மாணவர்கள் வரத் தொடங்கி விடுவார்கள். பள்ளி மாற்றுச்சான்றிதழுடன் வரும் மாணவர்களுக்கு சேர்க்கையுடன் பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சி அட்டவணை, கையேடு வழங்கப்படுகிறது. மாற்றுச்சான்றிதழ் கொண்டு வராத மாணவர்களிடம், மாற்றுச்சான்றிதழை அளித்து விட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள அறிவுறுத்துகிறோம்” என்றனர்.

மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். இதுகுறித்த புள்ளி விவரம் பின்னர் வெளியிடப்படும். மாநகராட்சி பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் நேரடியாக பெற்றோருடன் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சேர்க்கை பெறலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x