Last Updated : 17 Jun, 2021 03:10 PM

 

Published : 17 Jun 2021 03:10 PM
Last Updated : 17 Jun 2021 03:10 PM

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி கிடைக்காமல் விடுபட்டவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் 'டேப்'- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி கிடைக்காமல் விடுபட்ட மாணவ- மாணவிகள் 2 லட்சம் பேர் மற்றும் நிகழாண்டில் படிப்பவர்கள் அனைவருக்கும் "டேப்" (கைக் கணினி) வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் மற்றும் கிராமாலயா ஆகியன சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஃபிரிட்ஜ்கள், ப்ரீஸர், டிஜிட்டல் வெப்பமானிகள், நீராவிக் கருவிகள், 1 லட்சம் கையுறைகள் உட்பட ரூ.73 லட்சம் மதிப்பிலான பொருட்களை, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

பொருட்களை வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவ- மாணவிகள் 2 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் மாணவ- மாணவிகளுக்கு "டேப்" எனப்படும் கைக் கணினி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, அதிமுக ஆட்சிக் காலத்தில் தர வேண்டியதையும் சேர்த்து அனைவருக்கும் டேப் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பேரிடர்க் காலத்தில் மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தைகள் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசிடமிருந்து நிதி வருவதில் தாமதம் நிலவுவதாகக் கூறி, அந்தக் குழந்தைகள் மீது கடந்த கால அதிமுக ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு ஏதேனும் நிலுவைத் தொகை தர வேண்டியது இருந்தால், அதை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x