10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இடம்பெறாமல் தேர்ச்சி சான்றிதழ்: பள்ளிக்கல்வித் துறை திட்டம்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இடம்பெறாமல் தேர்ச்சி சான்றிதழ்: பள்ளிக்கல்வித் துறை திட்டம்
Updated on
1 min read

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இடம் பெறாமல் தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர்கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து வந்தனர்.

இதில், முந்தைய 9-ம் வகுப்புமதிப்பெண், கிரேடு முறையில் சான்றிதழ் உட்பட பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், மாணவர்களின் உயர்கல்வி சம்பந்தப்பட்டது என்பதால் இறுதி முடிவு எடுப்பதில் குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில்10-ம் வகுப்புக்கு மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நேரடி வகுப்புகள்கூட 2 மாதங்களேநடைபெற்றன. இதுதவிர, முந்தையஆண்டு 9-ம் வகுப்புக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டதால் இறுதி மதிப்பெண் கணக்கிடுவது பெரும் சிக்கலாக இருந்தது. எனவே, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக மதிப்பெண் வழங்காமல், தேர்ச்சியை மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சான்றிதழில் மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். மதிப்பெண் இருக்காது.

பிளஸ் 1 சேர்க்கையில் மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவை வழங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு சான்றிதழ் வழங்குவதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த வடிவில் சான்றிதழ் தயாரித்துஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பிறகுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in