Published : 07 Jun 2021 05:01 PM
Last Updated : 07 Jun 2021 05:01 PM

ஆன்லைனில் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு

கரோனா பெருந்தொற்றால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தாத பள்ளிகளில் ஆன்லைனிலேயே தேர்வை நடத்தி, அதற்கான மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு ஜூன் 28 கடைசித் தேதி ஆகும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சுமார் 23 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 68 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். கரோனா பெருந்தொற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு 2020- 21ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்களின் குடும்பத்தினர் யாரேனும் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், அந்தக் குறிப்பிட்ட மாணவருக்கு மட்டும் தனியாக செய்முறைத் தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்திருந்தது.

செய்முறைத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஜூன் 11-ம் தேதிக்குள் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் பெருந்தொற்றால் இதுவரை செய்முறைத் தேர்வை எழுதாத மாணவர்களுக்குப் பள்ளிகள் ஆன்லைன் மூலம் செய்முறைத் தேர்வை நடத்தலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பட்டாளர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

'' * பெருந்தொற்றால் நாடு முழுவதும் சில பள்ளிகள் இதுவரை செய்முறைத் தேர்வை மாணவர்களுக்கு முடிக்காமல் உள்ளன.

* பள்ளி அளவிலான மதிப்பீட்டைப் பொறுத்தவரை மீதமுள்ள செய்முறைத் தேர்வு அல்லது அகமதிப்பீட்டுத் தேர்வுகளை, பள்ளிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த வேண்டும்.

* இதற்காக சிபிஎஸ்இ சார்பில் வெளியில் இருந்து தேர்வுக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார்.

* சிபிஎஸ்இ சார்பில் பாடங்களுக்கு எப்போது தேர்வை நடத்த வேண்டும் என்பதைத் தேர்வு கண்காணிப்பாளர் முடிவு செய்வார் .

* சிபிஎஸ்இ சார்பில் தேர்வுக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படாத பாடங்களுக்குப் பள்ளி ஆசிரியரே, தேர்வுக் கண்காணிப்பாளராகத் தேர்வுகளை நடத்துவார். அப்போது ஆன்லைன் மூலமாகவே கேள்விகள் கேட்கப்படும்.

* பள்ளி அளவிலான தேர்வில் மாணவர்களின் திறனை மதிப்பிட்டு மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மதிப்பீட்டை நடத்தும்போது அனைத்துப் பள்ளிகளும் முறையான கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

* பள்ளி அளவிலான தேர்வுக் கண்காணிப்பாளர்கள் மாணவரை மதிப்பிடும்போது, பள்ளி ஆவணங்களுக்காக ஆன்லைனிலேயே புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* இந்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஜூன் 28ஆம் தேதிதான் கடைசியாகும். அதற்குப் பிறகு தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.

* 12ஆம் வகுப்புத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களின், செய்முறை / அக மதிப்பீடு முறை குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும்''.

இவ்வாறு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x