Published : 05 Jun 2021 03:12 PM
Last Updated : 05 Jun 2021 03:12 PM

மருத்துவ, உளவியல் நிபுணர்களிடமும் ஆலோசனை; இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

சென்னை

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மருத்துவ, உளவியல் நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் எனவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், குஜராத், ம.பி. உள்ளிட்ட 10 மாநிலங்களிலும் 12-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே சட்டப்பேரவை கட்சிப் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காணொலி மூலம் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க் கட்சியான அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக, கொமதேக, தவாக, புதிய பாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ நிபுணர்களுடனும், உளவியல் நிபுணர்களுடனும் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ''சட்டப்பேரவையின் 13 கட்சிப் பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிரதிநிதியும் ஒவ்வொரு விதமான கருத்தைத் தெரிவித்தார்.

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சியினருக்கும் நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தோம். உடனடியாக அவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை எடுத்துக் கூறினர். அவர்களுக்குத் திமுக சார்பிலும் முதல்வர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சிப் பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சிஎம்சி தலைவர், ஐசிஎம்ஆர் பிராந்தியத் தலைவர், மனநல நிறுவனத்தின் (ஐஎம்எச்) தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல மருத்துவத் துறை நிபுணர்களும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்தக் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து விரிவான அறிக்கையாக மாற்றி முதல்வரிடம் நேரடியாக அளிக்க உள்ளோம்.

அனைத்துத் தரப்பினரும் கூறிய ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு முதல்வரிடம் இதுகுறித்துத் தெரிவிப்போம். இறுதி முடிவை அவர்தான் எடுப்பார்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x