Published : 04 Jun 2021 03:38 PM
Last Updated : 04 Jun 2021 03:38 PM

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலை. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி/ மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்ததால், மறு தேர்வு நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் மறுதேர்வு மற்றும் ஏப்ரல்/ மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'' * தேர்வுகள் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதைப் போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும்.

* வீட்டிலிருந்தே தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

* முன்னதாக மாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி/ மடிக்கணினி/ மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைய வசதியுடன் வைத்திருக்க வேண்டும்.

* மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், அழிப்பான், ஏ4 தாள்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

* ஹால் டிக்கெட்டைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அந்தந்தத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

* தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மின்னஞ்சல்/ கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.

* தேர்வு காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.

* வினாத்தாளைப் பெறுவதற்கு 9 முதல் 9.30 வரையிலும், தேர்வுகளை எழுத 9.30 முதல் 12.30 வரையிலும் விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய 12.30 முதல் 1.30 வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிற்பகல் வேளையில் 2 முதல் 2.30 வரை வினாத்தாளைப் பெறவும் 2.30 முதல் 5 மணி வரை தேர்வு எழுதவும் 5.30 முதல் 6 மணி வரை விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பவும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து, தனி வெள்ளைத் தாளில் நீலம் மற்றும் கருப்பு நிற மையால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. ஒருவேளை பக்கம் எழுதப்படாமல் இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.

* ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்.

* தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப் வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும்.

* தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.

* விடைத்தாளை எடுத்து நூலில் கட்டி, விரைவுத் தபால், பதிவுத் தபால் அல்லது கொரியர் மூலம் அந்தந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமே அனுப்ப வேண்டும்.

* நேரடியாகக் கல்வி நிறுவனத்திற்குச் சென்று விடைத்தாளைத் தரக்கூடாது.

* ஒவ்வொரு தாளின் மேல்புறத்திலும் மாணவரின் பெயர், பாடக் குறியீட்டு எண், தேர்வின் பெயர், பதிவு எண் ஆகியவற்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

* ஒவ்வொரு தாளின் கீழ்ப்புறத்திலும் தேர்வு தேதி, பக்கம் எண், மாணவர்களின் கையொப்பம் ஆகியவை இருக்க வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அந்தந்தக் கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகலாம்''.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x