Last Updated : 04 Jun, 2021 11:57 AM

 

Published : 04 Jun 2021 11:57 AM
Last Updated : 04 Jun 2021 11:57 AM

பிளஸ் 2 தேர்வு ரத்தானால் தனியார் பள்ளிகளுக்கே லாபம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

பிளஸ் 2 தேர்வு ரத்தானால் தனியார் பள்ளிகளுக்கே லாபம் என்று தெரிவித்துள்ள மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், பிளஸ் 2 தேர்வை நடத்த வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அளித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்வு நடத்துவது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். மாணவர்கள், பெற்றோரிடம் தேர்வு குறித்து கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் தேர்வு குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் இரா.இளங்கோவன் பிளஸ் 2 தேர்வைக் கட்டாயம் நடத்தவேண்டும் என வலியுறுத்தி, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

’’கரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் வேளையில், அதன் தாக்கம் குறைந்த நேரத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட பாடங்களை மூன்று மாதங்கள் முழுமையாக நடத்தி முடித்துள்ளோம். அவர்கள் இழந்த கற்றல் நாட்களின் பாதிப்புகளை நன்கு உணர்ந்து, ஆர்வமுடன் படித்தனர். தங்களின் வழிகாட்டுதல்படி மீண்டும் ‘ஆன்லைன்’ வழியே திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது பாடங்களோடு மாணவர்கள் தொடர்பில்தான் உள்ளனர்.

இரா.இளங்கோவன்

5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது கூட்டம் சேர்ந்தது போலவும், மார்க்கெட், கோயில்களில் பொதுமக்கள் கூடுவது போலவும் மாணவர்கள் கூடப்போவது இல்லை. அரசின் துரித நடவடிக்கையால் தற்போது 2ஆம் அலையும் குறைகிறது. ஜூன் 15க்குப் பிறகு 12ஆம் வகுப்பு மாணவர்கள் அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே அறைக்கு 10 அல்லது 20 மாணவர்கள் வீதம் அனுமதித்து தக்க பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடத்தலாம்.

தேர்வின்றித் தேர்ச்சி அளிப்பது மாணவர்களின் எதிா்காலத்தைச் சிதைக்கும். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். 10 சதவீத அளவிலுள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு வேண்டுமானால் ஆல் பாஸ் பயனளிக்கலாம். 90 சதவீதம் நன்கு படிக்கும், உயர் கல்வியில் சாதிக்க விரும்பும், உண்மையாகப் படிக்கும் மாணவர்களின் எதிா்காலத் திட்டங்கள் பாழாகிவிடும். உயர்கல்விச் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் உருவாகும்.

பருவத் தேர்வு, திருப்புதல் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி வழங்கினால் மெட்ரிக், தனியார் பள்ளிகளுக்குத்தான் லாபம். இதை வைத்துக் கூடுதல் மதிப்பெண்களை வழங்குவதாகப் பெற்றோரிடம் ஆசையைத் தூண்டி, நிலுவைக்கான முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வாய்ப்புள்ளது.

அரசுப் பள்ளிகளில் இதுபோன்று செய்ய வழியில்லை. எதுவானாலும் முறையாகச் செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்பி, தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் பாதிக்கப்படுவர். மன உளைச்சலும் ஏற்படும். எனவே, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகளிலிருந்து வினாத்தாள்களைத் தயாரித்து, பாதுகாப்புடன் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும்’’.

இவ்வாறு இளங்கோவன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x