Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணை ஏப்.22-க்குள் பதிவேற்ற உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை ஏப்.22-ம்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதனால் கரோனா பரவல் அச்சத்துக்கு இடையிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதற்கிடையே பிளஸ் 2 மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை விரைவாக பதிவு செய்ய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கான செய்முறை விளக்க நோட்டுகள், ஆய்வக செயல்பாடுகளை வைத்து அவர்களுக்கான மதிப்பெண்களை வழங்கி அவற்றை அகமதிப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்கான மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதன்பின் அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை ஏப்ரல் 22-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், மதிப்பெண் பட்டியலின் பிரதிகளை அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பணிகளை காலதாமதம் இல்லாமல் துரிதமாக செய்து முடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x