Published : 20 Mar 2021 05:49 PM
Last Updated : 20 Mar 2021 05:49 PM

அதிகரிக்கும் கரோனா: தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற புதுச்சேரி பள்ளிகளுக்கு உத்தரவு

புதுச்சேரி

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா அதிகரிப்பால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு வரும் 22 முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை தொடங்குவதால் இக்குழந்தைகள் அடுத்த கல்வியாண்டுதான் பள்ளிக்கு வருவார்கள். அதே நேரத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வாரம் ஐந்து நாட்கள் பள்ளிகள் இயங்க உள்ளன.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ, இன்று பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "புதுவை, காரைக்காலில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்க வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடல் வெப்பத்தைப் பரிசோதிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

வகுப்பறைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். உடல்நலம் பாதித்த ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா புதுவையில் வேகமெடுத்திருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x