Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக். மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும்எம்.டெக். பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நடந்து வந்தது.

இந்த நிலையில், நடப்பு கல்விஆண்டில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கைநடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உயிரி தொழில்நுட்ப வியல் பிரிவில் 3 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேநேரம், கணக்கீட்டு தொழில்நுட்பம் பிரிவில் தகுதியான மாணவர்கள் (EWS பிரிவு) யாரும் இல்லாததால் அதில்இடங்கள் எதுவும் ஒதுக்கப்பட வில்லை.

விதிமீறல்

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவது விதிமீறல்.

தமிழகத்தில் மிகவும் குறை வான எண்ணிக்கையில் இருக்கிற, இடஒதுக்கீட்டில் வராத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பிற பிரிவு மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும். இதை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைப்படிதான், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வருகிறது. எனவே, இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x