Published : 13 Feb 2021 03:14 PM
Last Updated : 13 Feb 2021 03:14 PM

ஜேஇஇ மெயின் தேர்வு: மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு என்டிஏ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு, ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 11-ம் தேதி வெளியானது. இந்நிலையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

*தேர்வுக்குச் செல்லும்போது மாணவர்கள் உலோகப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. எவ்விதமான நகைகள், ஆபரணங்களையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

*தேர்வு மையத்தில் மின்னணு கடிகாரங்கள் அனுமதிக்கப்படாது.

*மதச் சின்னங்களை அணியும் தேர்வர்கள் கேட் மூடும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத் தேர்வு மையத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

*தேர்வர்கள் மதச் சின்னங்கள் அல்லாது, தங்களது தலையைத் தொப்பி, துப்பட்டா போன்றவற்றால் மறைக்கக் கூடாது.

*கைப்பைகள், மின்னணுப் பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

*உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

*தொற்றுக் காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி மாணவர்கள் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சானிடைசர்களைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

கூடுதல் விவரங்களைக் காண: jeemain.nta.nic.in.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x