Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். உள்ளிட்ட 17 மருத்துவப் படிப்புகள்; பொதுப்பிரிவுக்கு பிப்.10 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு: சிறப்பு பிரிவினருக்கு பிப். 9-ல் நேரடியாக நடக்கும்

சென்னை

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். உள்ளிட்ட 17 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவினருக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு பிப்.10 முதல் ஆன்லைனிலும் கலந்தாய்வு நடக்கிறது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்ஸிங், பி.பார்ம்., பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி,நோய் குறியியல்) உட்பட மருத்துவம் சார்ந்த 17 வகையான துணை பட்டப் படிப்புகள் உள்ளன. இதில்13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

2020-21 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதிவு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு, தகுதியான 37,334 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள்) கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

பிப்.23 வரை நடைபெறும்

பொதுப் பிரிவு, இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஆன்லைனில் நடக்க உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்கள் செயல்முறை கட்டணமாக ஆன்லைனில் ரூ.250 செலுத்த வேண்டும். படிப்பு, கல்லூரியை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வு வழிமுறைகள் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளன. மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x