Published : 05 Feb 2021 04:39 PM
Last Updated : 05 Feb 2021 04:39 PM

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழக முதல்வர் ஜனவரி 2019 ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 5,068 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை ரத்து செய்ததை வரவேற்கிறோம். தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியினைத் தெரிவிக்கிறோம்.

எனினும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, பறிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி- சரண் விடுப்பினை உடனடியாக முன் தேதியிட்டு வழங்குதல், 21 மாத ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை வழங்குதல், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்குதல், ஊதிய முரண்பாட்டினைக் களைதல், ஆசிரியர், அரசு ஊழியர்- பணியாளர் பகுப்பாய்வுக் குழுவின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.

ஜனவரி 2019 ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய பணியிடத்தில் பணியமர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இது தொடர்பாக சென்னையில் பிப்ரவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் 72 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.

அதே நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்- உயர்மட்டக் குழுத் தலைவர்கள் தலைமையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x