Published : 23 Jan 2021 04:39 PM
Last Updated : 23 Jan 2021 04:39 PM

9, 11-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை திட்டம்

சென்னை

தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஜனவரி 19-ம் தேதி முதல் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

பள்ளி நுழைவு வாயிலில் வெப்பமானி கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், வகுப்பறையில் மேஜைக்கு இருவர் வீதம் 20 முதல் 25 மாணவர்கள் வரை அமர வைக்கப்படுகின்றனர். பள்ளி வளாகங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள்முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து, ஜனவரி 25-ம் தேதி ஆலோசனை நடத்தி, முதல்வரின் ஒப்புதலைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின் முடிவில், 9 மற்றும் 11-ம் வகுப்புகளைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அவரின் ஒப்புதலைப் பெற்று பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x