Published : 22 Jan 2021 04:04 PM
Last Updated : 22 Jan 2021 04:04 PM

அரசுப் பள்ளியில் மாணவர்களே உருவாக்கிய கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் வெளியீடு

திருவாரூர்

திருவாரூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களே உருவாக்கிய கரோனா வாசகங்கள் வெளியிடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குக் கரோனா நோய்த்தொற்று குறித்து அறியச்செய்யும் விதமாக மாணவர்களே கரோனா விழிப்புணர்வு வாசகங்களைத் தயாரித்தனர். ஆசிரியர்களின் மேற்பார்வையில், வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இன்று வெளியிடப்பட்டன. அப்பள்ளியின் சமூக அறிவியல் மன்றம் சார்பாகத் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐரன்பிரபா வெளியிட்டார்.

இதுகுறித்து அப்பள்ளியின் சமூக அறிவியல் மன்றப் பொறுப்பாளர் ஆசிரியர் சூரியகுமார் கூறும்போது, ''தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தும் பணி தொடங்கி இருக்கிறது. இந்தச் சமயத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்கள் கரோனா நோயில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும் இந்தச் சுவரொட்டிகளைத் தயாரித்திருக்கிறோம்.

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளும் பயன்பெறும் வண்ணம் இந்தச் சுவரொட்டிகள் வாட்ஸ் அப் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் பகிரப்படும்'' என்று தெரிவித்தார்.

மாணவர்களின் இந்த முயற்சியை அப்பள்ளியின் ஆசிரியர்கள் விஜயகுமாரி, ராமமூர்த்தி, இளையராஜா, ரேணுகா ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x