Last Updated : 19 Jan, 2021 04:49 PM

 

Published : 19 Jan 2021 04:49 PM
Last Updated : 19 Jan 2021 04:49 PM

கோவையில் 663 அரசுப் பள்ளிகள் திறப்பு: இரு ஷிப்ட்டுகளாக வகுப்புகள் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் 663 அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு ஷிப்ட்டுகளாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2020-2021ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இணைய வழியில் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தலாமா? என்று இம்மாதத் தொடக்கத்தில், தமிழக அரசு பெற்றோரிடம் கருத்து கேட்டது. அப்போது 95 சதவீதப் பெற்றோர் ஆதரவு தெரிவித்ததையடுத்து, பள்ளிகள் இன்று (ஜன.19) திறக்கப்பட்டன.

இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 663 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதேபோல் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்கள் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனர். பள்ளிகளின் நுழைவு வாயிலில் வெப்பமானி கொண்டு, மாணவர்கள் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசத்துடன் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் கிருமிநாசினி வழங்கப்பட்டு, மாணவர்கள் அதைக் கைகளில் தடவிக்கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வகுப்பறைகளுக்குச் சென்று அமர்ந்தனர்.

மாணவிகளுக்கு வெப்பமானி கொண்டு உடல் வெப்பம் பரிசோதிக்கும் ஆசிரியர்கள்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புக்கு 20 முதல் 25 மாணவர்கள் வரை, பெஞ்சுக்கு இருவர் வீதம் அமர வைக்கப்பட்டனர். வகுப்பறையிலும் முகக்கசவம் அணிந்தவாறே மாணவர்கள் பாடங்களைக் கவனித்தனர்.

காலை முதல் மதியம் வரை ஒரு பகுதியாகவும், பிற்பகல் முதல் மாலை வரை ஒரு பகுதியாகவும் மாணவர்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு வகுப்பில் அதிகபட்சம் 25 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100 சதவீத ஆசிரியர்களும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ''மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். குடிநீர், உணவை வீட்டில் இருந்து கொண்டுவர வேண்டும். சக மாணவர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. நண்பர்களுடன் சமூக இடைவெளி விட்டுப் பழக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு வகுப்புகள் நடத்தத் தேவையில்லை என்றும், இறை வணக்கம் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளை நடத்த வேண்டாம் என்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

நாள்தோறும் மாணவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். அப்போது அதிக வெப்பம், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

மாணவர்கள் ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x