Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 11:55 AM
கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஜனவரி 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவுசெய்தது.
இதற்கான பெற்றோர் கருத்துகேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துவித பள்ளிகளிலும் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல பள்ளிகளில் படிவங்களில் எழுத்துப்பூர்வமாக கருத்துகள் கேட்டு பெறப்பட்டன. சில பள்ளிகளில் வாய்மொழியாகவும், தொலைபேசி வழியாகவும் பெற்றோரின் கருத்துகள் பெறப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர் பலரும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, பள்ளிகளை ஜனவரி 3-வது வாரத்தில் திறக்க கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கருத்து கேட்பு கூட்டத்தில் கிடைத்த தகவல்களின்படி 10, 12-ம்வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க 80 சதவீதபெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஜனவரி 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவாகியுள்ளது. இதுகுறித்த அறிக்கை தமிழக அரசின் பரிசீலனைக்கு 8-ம் தேதி (இன்று) அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு, பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முதல்வர் ஓரிருநாளில் அறிவிப்பை வெளியிடுவார். பள்ளிகளை திறந்தாலும் பெற்றோர் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளித்த பிறகே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோர் சம்மதத்துடன் வீட்டில் இருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!