Last Updated : 06 Jan, 2021 02:10 PM

 

Published : 06 Jan 2021 02:10 PM
Last Updated : 06 Jan 2021 02:10 PM

புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறப்பு: மழையிலும் ஆர்வமுடன் வகுப்புக்கு வந்த 90% மாணவர்கள் 

புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த மாதம் 18-ம் தேதி கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனிடையே கடந்த 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று (ஜனவரி 6) புதுவையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்ட சூழலில் புதுச்சேரியில் மழைப்பொழிவு அதிக அளவில் இருந்தது. எனினும், மழையைப் பொருட்படுத்தாமல் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்தனர்.

சமூக இடைவெளி, கட்டுப்பாடுகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான கல்லூரிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் மாணவர்களின் வருகை இருந்தது.

தன்னாட்சி பெற்ற பாரதிதாசன் மகளிர் கல்லூரியும் இன்று திறக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் காலையில் கலைப் பிரிவுகள், மதியம் அறிவியல், வணிகவியல் பிரிவுகள் என ஷிப்ட் முறையில் வகுப்புகள் இயக்கப்பட்டன. வகுப்பிற்கு 30 மாணவிகள் என வாரத்திற்கு 3 நாட்கள் ஷிப்ட் முறையில் மாணவிகள் கல்லூரிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளி, உடல் வெப்ப சோதனை என கரோனா கட்டுப்பாடுகளை மாணவிகள் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட மாணவிகள், மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x