Published : 06 Jan 2021 01:49 PM
Last Updated : 06 Jan 2021 01:49 PM

பள்ளிகளைத் திறக்கலாமா?- தமிழகம் முழுவதும் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு தொடங்கியது

தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்துப் பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் ஜன.8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, கருத்துக் கேட்புக்காக அனைத்து வகுப்பறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. தனிமனித இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கு வரும் பெற்றோர்களிடம் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஒரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில், மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். பள்ளிகள் திறக்கப்படக் கூடாது எனில் அதற்கான காரணத்தைப் பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டும். இந்தக் கூட்டம் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x